தமிழ் திரை உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலா தெலுங்கு படங்களிலும் நடித்து நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அமலா தற்போது பிராணிகள் பாதுகாப்புக்கு குரல் கொடுத்து வருகிறார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தெருநாய்களை கொல்லக்கூடாது என்று தீர்ப்பும் பெற்றுள்ளார். இதனால் ஐதராபாத் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களை பிடிப்பதை பஞ்சாயத்து, மாநகராட்சியினர் நிறுத்திவிட்டனர். இதையடுத்து அமலாவுக்கு வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வெளியான பதிவுகளில், "அமலா வழக்கினால் தெருநாய்களை பிடிப்பதை நிறுத்தி உள்ளனர். இதனால் சாதாரண மக்களும், குழந்தைகளும் தெருநாய் கடியில் சிக்குகிறார்கள். தெருநாய்கள் கடிப்பதை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றால், அவர்கள் அமலா வழக்கில் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை காட்டி எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று கைவிரிக்கிறார்கள். இதனால் பலர் வேதனையில் இருக்கிறோம். கடிக்கும் தெருநாய்களை உங்கள் வீட்டின் முன்னால் கொண்டுவிடட்டுமா. அப்போதுதான் எங்கள் வேதனை உங்களுக்கு புரியும்'' என்று தெரிவித்து உள்ளனர். இது பரபரப்பாகி உள்ளது.