சினிமா செய்திகள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள்; திரைத் தமிழுக்குச் சிறந்தநாள்.. - வைரமுத்து

2030 நூற்றாண்டு விழா எடுப்பேன் பெருந்திரள் கூட்டி அவன் பெருமை சொல்வேன் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 ஆண்டுகள் இந்த பூமிக்கு வந்துபோன ஒரு கந்தர்வன். இசைப்பாட்டுக்குச் சொல்நீதி செய்தவன். திரைப்பாட்டைச் சமூக இலக்கியமாய் நிறுவப் பார்த்தவன். சங்க இலக்கியத்தின் சொல்லாட்சிபோல ஒரு சொல் உருவிப்பிறிதொரு சொல் பெய்ய முடியாத செய்ய செய்யுள் செய்தவன்.

முறைசார் கல்வி பயிலாமல் தரைசார் கல்வி பயின்று தமிழ்க்கவி ஆனவன். ஒரு நதி மலையில் பிறந்தாலும் மருத நிலத்துக்கே பெரிதும் பயன்படுமாறுபோல கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிறந்தும் திராவிட இயக்கத்துக்கே செழுமை சேர்த்தவன்.

“தூங்காதே தம்பி, திருடாதே பாப்பா சின்னப் பயலே, குறுக்கு வழியில் வீடு நோக்கி, குட்டி ஆடு முகத்தில் முகம் பார்க்கலாம் ஆடைகட்டி வந்த நிலவோ சின்னஞ்சிறு கண்மலர்” அவன் பாடல்களில் இசை கழிந்தாலும் தமிழ் கழியாது.

2030 நூற்றாண்டு விழா எடுப்பேன் பெருந்திரள் கூட்டி அவன் பெருமை சொல்வேன்; பேருண்மை பேசுவேன். இன்று அவன் பிறந்தநாள்; திரைத் தமிழுக்குச் சிறந்தநாள்..

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.