மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் குறித்து காப்புரிமை வழக்கு தொடரப்பட்டது. இந்துஸ்தானி இசைக் கலைஞர் உஸ்தாத் பயாஸ் வாசிபுதின் தாகர் என்பவர், ‘ஷிவ் ஸ்துதி’ என்ற இசைத்தொகுப்பில் உள்ள இசை அனுமதி இல்லாமல் ஏ.ஆர்.ரகுமானால் பயன்படுத்தப்பட்டதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் காப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கில், ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடம் வைப்பு செய்ய வேண்டும் என்றும், பாடலுக்கான அங்கீகாரத்தை ஜூனியர் தாகர் சகோதரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து மனுதாரரர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ரூ.2 கோடி டெபாசிட் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டு, அடுத்தக்கட்ட விசாரணையை பிப்.20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி, இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.ஆர். ரகுமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "பொன்னியின் செல்வன் 2 படத்தில் வரும் குறிப்பிட்ட பாடலுக்கான அங்கீகாரத்தை, ஜூனியர் தாகர் சகோதரர்களுக்கு கொடுத்து விடுகிறோம்" என உறுதியளித்தார்.
இதனை குறித்துக் கொண்ட நீதிபதிகள், "அனைத்து சமூக வலைதளங்களிலும், ஓடிடி தளங்களிலும் மேற்குறிப்பிட்ட பாடலுக்கான அங்கீகாரத்தை, எழுத்து வடிவத்தில் கொடுக்க வேண்டும். அடுத்த 5 வாரங்களுக்குள் இதனை செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, ``இசைக் கோர்வையை இயற்றியது யார்? அதன் உண்மைத்தன்மை, காப்புரிமை மீறல் குறித்த கேள்விகளுக்கு இன்னும் விடை காணப்படவில்லை. சுமூக தீர்வு காணும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் மட்டுமே, இசைக் கோர்வைக்கான அங்கீகாரத்தை வழங்க ஒப்புக் கொண்டேன்'' என்று தெரிவித்தள்ளார்.