சினிமா செய்திகள்

‘சென்னையை ரொம்ப மிஸ் பண்றேன்’ - பிரபாஸ்

பிரபாஸ், சென்னையின் மீது கொண்டுள்ள தனது அன்பை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

சென்னை,

சென்னையில் பிறந்து, பின்னர் ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்த பான் இந்தியன் நட்சத்திரம் பிரபாஸ், சென்னையின்மீது கொண்டுள்ள தனது அன்பை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் சந்தோஷ் சோபன் மற்றும் மனசா வரணாசி நடித்துள்ள ‘கப்புல் பிரண்ட்லி’ திரைப்படத்தின் குழுவினருடன் கலந்துரையாடிய போது அவர் இந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டார்.

பிரபாஸ் அதில் கூறுகையில், “நான் சென்னையில் பிறந்தவன். அங்கு டான் போஸ்கோ பள்ளியில் படித்தேன். இன்றும் சென்னைக்கு சென்றால் டான் போஸ்கோ பள்ளியை பார்ப்பேன். சில சமயம் சென்னையை மிஸ் செய்வேன். அந்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இங்கு வந்த பிறகு தமிழை நிறைய மறந்துவிட்டேன். ஆனால் ராஜு மாஸ்டர், பிரபு மாஸ்டர் போன்ற நண்பர்கள் மற்றும் பல தமிழ் டெக்னீஷியன்களுடன் பேசுவதால் எனது தமிழ் மீண்டும் மேம்பட்டது. இல்லையெனில் தமிழை முழுவதும் மறந்திருப்பேன். பள்ளி காலத்தில் சரியாக தமிழில் பேசுவேன். இப்போது சில வார்த்தைகள் தவறிவிடுகின்றன,” என்றார்.