சினிமா செய்திகள்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம்... நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு

அவரது ரசிகர்கள் புதிய படம் குறித்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சென்னை,

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநராக அறிமுகம்

தமிழ் சினிமாவின் இளம் தலைமுறை இயக்குநர் மற்றும் நடிகர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநராக அறிமுகமான அவர், பின்னர் நடிகராகவும் தொடர்ச்சியாக வெற்றி படங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

2019-ம் ஆண்டு வெளியான 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், முதல் படத்திலேயே வெற்றியை ருசித்தார். ஜெயம் ரவி, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்த அந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

வெற்றி படங்கள்

அதை தொடர்ந்து, 'லவ் டுடே' திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்தார். அந்த படம் மாபெரும் வெற்றிபெற்று, பிரதீப் ரங்கநாதனை முன்னணி இளம் நட்சத்திரமாக உயர்த்தியது. பின்னர் அவர் நடித்த 'டிராகன்' மற்றும் 'டியூட்' திரைப்படங்களும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றி படங்களாக அமைந்தன. சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'எல்ஐகே' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

புதிய படம்

இதற்கிடையில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குவதுடன், அதில் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை (ஜூலை 6) காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் புதிய படம் குறித்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.