சென்னை,
நடிகை ராதிகா சரத்குமார், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ’தாய் கிழவி’ திரைப்படத்தின் மூலம், படத்தின் லாபத்தில் பங்கு பெற்ற தமிழ் நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த “தாய் கிழவி” திரைப்படம் பிப். 27 அன்று திரையரங்குகளில் வெளிவந்தது.
இத்திரைப்படம் தற்போது ரூ. 55 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது. 48 வருட சினிமா பயணத்தில், ராதிகா இதுவரை பெறாத ஒரு விஷயமான படத்தின் லாபத்தில் சம்பளம் பெற்றிருக்கிறார்.
இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராதிகா, “இந்த படத்தின் லாபத்தில் கிடைக்கும் பங்கை சம்பளமாக பெற்றுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘ஒரு நடிகையாக எனக்கு 48 ஆண்டுகளாக அனுபவம் இருக்கிறது. ஆனால் ஒரு படத்தின் லாபத்தில் பங்காக சம்பளம் கிடைத்தது இதுவே முதல் முறை. தமிழ் சினிமாவில் லாபத்தில் கிடைக்கும் பங்கில் சம்பளம் பெற்ற ஹீரோயின் நானாகத்தான் இருக்கலாம்” என்று ராதிகா கூறினார்.