சினிமா செய்திகள்

அனுஷ்காவை பாராட்டிய ரஜினி

அனுஷ்கா கதை தேர்வில் அக்கறை எடுக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கிறார்.

னுஷ்கா கதை தேர்வில் அக்கறை எடுக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கிறார். வழக்கமான காதல் படங்களை தவிர்த்து விடுகிறார். அருந்ததிக்கு பிறகு பாகுபலி படம் அவரை இன்னொரு உயரத்துக்கு கொண்டு போனது. இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை கூட்டி நடித்த காதாபாத்திரத்துக்கும் வரவேற்பு கிடைத்தது.

ருத்ரமாதேவி சரித்திர படத்தில் வாள் சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் எடுத்து கஷ்டப்பட்டு நடித்து இருந்தார். அதுபோல் சமீபத்தில் தமிழ், தெலுங்கில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் பாகமதி படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன. ரஜினிகாந்தும் போனில் பாராட்டி இருக்கிறார்.

இதுகுறித்து அனுஷ்கா கூறியதாவது:-

பாகுமதி படத்தில் எனது நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் ரஜினிகாந்திடம் இருந்து பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவர் என்னை பாராட்டியதை சிறந்த பாராட்டாக கருதுகிறேன். தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.

அடுத்து திகில் படங்களை தவிர்த்து வணிக படமொன்றில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். கடந்த சில வருடங்களாகவே கஷ்டமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்ததால் உடம்பில் காயங்கள் ஏற்பட்டன. அதனால் இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்து விட்டு புதிய படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.