சினிமா செய்திகள்

சமூக ஆர்வலர் கொலை : கொந்தளித்த நடிகை பார்வதி

அவரின் மரணம் குறித்து பெங்களூரு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:

கைவிடப்பட்ட நாய்களைப் பராமரித்து வந்த திருச்சூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுனிதா, பெங்களூருவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவரது மறைவு குறித்து நடிகை பார்வதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"சுனிதாவை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாகத் தெரியும். அவர் ஒரு அற்புதமான மனிதர். விலங்குகளுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். சுனிதாவின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை. இந்தக் கொடூரத்தைச் செய்த குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு நீதி கிடைக்கும். சுனிதா தனது பராமரிப்பில் ஏராளமான நாய்களை வைத்திருந்தார். தற்போது அவர் மறைந்த நிலையில், அந்த நாய்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளன.சுனிதா பராமரித்து வந்த செல்லப்பிராணிகளைத் தத்தெடுக்க விரும்புவோர் அல்லது அவற்றுக்கு உதவ முன்வருபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்." என நடிகை பார்வதி அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுனிதாவின் கொலையில் உள்ள மர்மங்கள் குறித்து பெங்களூரு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.