சென்னை,
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் திரிஷா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் கடந்த மாதம் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. நீதிமன்றங்களில் நடைபெறும் அநீதிகளை எதிர்த்து கருப்புசாமி களமிறங்குவது போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வெளியான முதல் நாளிலிருந்தே நேர்மறையான விமர்சனங்களையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்ற 'கருப்பு' திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்போது இந்த படம் உலகளவில் ரூ.300 கோடி வசூலை கடந்துள்ளது.
இந்த வசூல் சாதனை, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மேலும், அவரது திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் குவித்த திரைப்படமாகவும் 'கருப்பு' உருவெடுத்துள்ளது. இந்த சாதனை சூர்யா ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் வெளியாகத் தயாராகி வருகிறது. 'கருப்பு' வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.