மரகத நாணயம், ராட்சசன், புரூஸ்லீ ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், கன்னிமாடம் படத்தில் துணை இயக்குனராகவும் பணிபுரிந்தவர், ஜி.வி.பெருமாள் வரதன். இவர், வரலாற்று பின்னணியில் 1,000 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் திகில் படத்தை இயக்குகிறார்.
அவர் கூறியதாவது:-
பல்லவ மன்னர்களில் முக்கியமானவர், நந்திவர்மன். அவர் சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடந்த போரில் அவருடைய ஊரே பூமிக்குள் புதைந்து விடுகிறது. அதில் இருந்து தினமும் இரவில் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் யாரும் மாலை 6 மணிக்கு மேல் வெளியில் வருவதில்லை. இதுபற்றி தெரிந்து கொள்வதற்காக தொல்லியல் துறையினர் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் இறந்து போகிறார்கள்.
இந்த நிகழ்வுகளை திரைக்கதையாக்கி இருக்கிறோம். புதுமுகங்கள் சுரேஷ் ரவி, ஆஷா கவுடா ஜோடியாக நடிக்கிறார்கள். அருண்குமார் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னை, செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் நடைபெற இருக்கிறது.