கடக்,
'கே.ஜி.எப்.' படத்தில் கதாநாயகனாக நடித்து பான் இந்திய நடிகராக உயர்ந்தவர் யாஷ். கே.ஜி.எப்.படத்தின் 2-ம் பாகமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இதையடுத்து நடிகர் யாஷ்-க்கு கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உருவானது.
இந்நிலையில் நடிகர் யாஷ் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், யாஷ் பிறந்தநாளில் மிகப்பெரிய சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதாவது கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ரசிகர்கள் பேனர் வைக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்னழுத்த கம்பி பேனர் மீது உரசியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.