உடனே நான் அவரிடம், உங்கள் தகவலுக்காகச் சொல்கிறேன். படம் பண்ணுவதும், பண்ணாததும் பெரிய விஷயம் இல்லை. எப்போதும் அவர், நான் மதிக்கும் நல்ல நண்பர்தான் என்று சொன்னேன்.
இந்த நிலையில் எஸ்பி.முத்துராமன் யூனிட்டுக்காக ஒரு படம் எடுக்க ரஜினியை அணுகியிருக் கிறார்கள்.
உடனே ரஜினி, நீங்களும் ஏவி.எம்.மும் சேர்ந்து படம் பண்ணி விடுங்களேன். அது உங்களுக்காக இருக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்த விஷயம் பற்றி எஸ்பி.முத்துராமன், என்னை நேரில் சந்தித்து தெரிவித்தார்.
நான் அப்போது என்னுடைய கருத்தை இப்படி வெளிப்படுத்தினேன். எங்களுக்குத் தனியாக என்றால், தயாரிப்புச் செலவு கொஞ்சம் அதிகமானாலும் போனால் போகட்டும் என்று நினைப்போம். அதே போல விளம்பரச் செலவையும் நாங்கள் கொஞ்சம் அதிகமாகவே செய்வோம். உங்களுக்காக நடிகர், நடிகையர் தங்கள் சம்பளத்தில் ஏதேனும் சலுகை தரக் கூடும். கூட்டாக படம் எடுத்து அந்தச் சலுகையை நாங்களும் பங்கு போட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. உங்கள் யூனிட்டுக்காக நீங்கள் தனியே படம் பண்ணிக்கொள்ளுங்கள். நாங்கள் தனியாக படம் பண்ணிக்கொள்கிறோம். ரஜினி தரும் கால்ஷீட்டை வைத்து நீங்கள் படம் எடுத்தால் உங்கள் யூனிட்டில் இருக்கும் கிட்டத்தட்ட இருபது பேர்களுக்கு லாபத்தில் பங்கு கிடைக்கும். எனவே நாங்கள் இதில் கூட்டு சேர்ந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டேன்.
எஸ்பி.முத்துராமனும் சரி என்று சொல்லி விட்டு, நான் சொன்னதை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு ரஜினியும் ஓகே சொல்லிவிட்டார்.
ஆனால் திடீரென்று ஒரு நாள் என்னைச் சந்திக்க வருமாறு, ரஜினி அழைத்தார். நானும் போனேன். நம்ம படத்தை தீபாவளிக்கும் ரிலீஸ் பண்ணலாமா சார்? என்றார்.
எனக்கு சட்டென்று ஒன்றும் புரியவில்லை.
என்ன படம் சார் சொல்றீங்க? பூஜையே எதுவும் போடலியே என்றேன்.
ஆர்.வி.உதயகுமாரை வைத்துப் படம் எடுத்து தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணனும் என்றார் ரஜினி.
உடனே நான், முத்துராமன் சாருக்கு நீங்க படம் பண்ணனும். எங்களுக்கு நீங்க ஏழு படம் பண்ணியிருக்கீங்க. சம்பளம் கூட அவர்தான் பேசியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, திடீரென முத்துராமன் சாரை விட்டு விட்டு படம் எடுப்பது சரியாக வராது. முதல்ல முத்துராமன் சார் படத்துக்கு பூஜை போட்டு விட்டு, அப்புறம் நம்ம படம் பூஜை போடுவோம் என்றேன்.
கடைசியில் ரஜினி அதற்கு ஒப்புக்கொண்டு, முதலில் எஸ்பி.முத்துராமன் அவர்களுக்கே படம் செய்து கொடுத்தார். பாண்டியன் என்ற அந்தப் படம், ரஜினியை வைத்து முத்துராமன் இயக்கிய 25வது படம். இது ஒரு சாதனையாகும். வேறு எந்த இயக்குனரும், ரஜினியை வைத்து இத்தனை படங்களை இயக்கியது கிடையாது. பாண்டியன் படத்தை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் எஸ்பி.முத்துராமனின் மனைவி கமலா மறைந்தார். இருந்தபோதும், யூனிட்டுக்காக செய்யும் படம், நம்மால் வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, துக்கத்தை அடக்கிக் கொண்டு பாண்டியன் படத்தை முடித்து வெளியிட்டார். அந்தப் படம் வெற்றிப்படமாகவே அமைந்தது.
அதன் பிறகுதான் எங்களின் படம் தொடங்கப்பட்டது. அந்தப் படம் தான் ரஜினி, மீனா நடிப்பில் வெளியான எஜமான்.