ஐதராபாத்,
தமிழ் , தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை விதிகா ஷெரு. இவர் சமீபத்தில் திரைப்படத் துறையில் “கமிட்மெண்ட்” என்ற பெயரில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “கமிட்மெண்ட்” சினிமா துறையில் மட்டும் இல்லை, அனைத்து துறைகளிலும் உள்ளது. சில சம்பவங்கள் வெளியில் தெரியும், பல சம்பவங்கள் வெளிவராமல் போகின்றன” என்றார்.
தனக்கு 16 வயதாக இருந்தபோது நடந்த கசப்பான அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், “ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் நடந்த ஒரு ஆடிஷனுக்கு நான் அம்மாவுடன் சென்றேன். ஆடிஷன் முடிந்ததும், நான் தேர்வு செய்யப்பட்டதாக கூறி “கமிட்மெண்ட்” பற்றி கேட்டார்கள். அப்போது என்னை வெளியே அனுப்பி வைத்து, அம்மாவிடம் அதைப் பற்றி பேசினர்.
ஆனால், உடனே நாங்கள் அதனை மறுத்துவிட்டோம். கதை பிடித்திருந்தால் சம்பளம் இல்லாமல் கூட நடிப்போம், ஆனால் இப்படிப்பட்ட “கமிட்மெண்ட்” எதையும் ஏற்க மாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினோம்” என கூறினார்.
நடிகை விதிகா ஷெரு தமிழில் 'உயிர் மொழி' மற்றும் 'மகாபலிபுரம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.