கள்ளக்குறிச்சி,
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரவிமோகன் “நல்லது செய்ய வேண்டும் என்றால் எங்கிருந்தும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை” என்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அடுத்தடுத்த படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் நடிகர் ரவிமோகன் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
ரசிகர்களின் சில குடும்ப நிகழ்ச்சிகளில் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதாக தெரிவித்த ரவிமோகன், இனிவரும் காலங்களில் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் சுப நிகழ்ச்சிகளில் கட்டாயம் பங்கேற்பேன் என உறுதியளித்தார். மேலும், செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள தனது பிறந்தநாள் விழாவில் ரசிகர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரவிமோகன், தனது நடிப்பில் வெளியான வெற்றிப்படமான ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதைப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ‘தனி ஒருவன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியல் குறித்த கேள்விக்கும் ரவிமோகன் பதிலளித்தார். “நல்லது செய்ய வேண்டும் என்றால் எங்கிருந்தும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை. நல்லது செய்ய விரும்புபவர்கள் அரசியலுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் ரசிகர்களுடனான சந்திப்பு, ‘தனி ஒருவன் 2’ படத்தின் அப்டேட் மற்றும் அரசியல் குறித்த தனது கருத்து என பல்வேறு விஷயங்களை ரவிமோகன் பகிர்ந்து கொண்டுள்ளார்.