நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், மறுஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாக கிடைக்காததால், ‘ஜனநாயகன்’ பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்த படத் தயாரிப்பு நிறுவனம், படத்திற்கு சென்சார் சான்று கோரி ரிவைசிங் கமிட்டியிடம் அனுப்பியுள்ளது. சென்சார் போர்டு பரிந்துரைத்த மாற்றங்களை செய்ய படக்குழு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் படத்தின் நீளம் 20 நிமிடங்கள் வரை குறையும் என்றும் சொல்லப்படுகிறது. எனினும், படக்குழுவுடன் தொடர்பில் உள்ளவர்கள் தரப்பில் இதுபோன்ற தகவல்கள் மறுக்கப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில், எல்லாம் திட்டமிட்டபடி சென்றால் வரும் 20ஆம் தேதி ‘ஜனநாயகன்’ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஜனநாயகன்’ ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் இதனால் உற்சாகம் அடைந்துள்ளனர்.