முன்னோட்டம்

இயற்கை பாதுகாப்பு கதையில் பாக்யராஜ்...!

‘கடாட்சம்' என்ற பெயரில் புதிய படத்தில் பாக்யராஜ் நடித்துள்ளார்.

கலைக் கல்லூரி மாணவர்கள் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக அடர்ந்த காட்டுப் பகுதிக்கு செல்லும்போது ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள்? என்பதை மையமாக வைத்து 'கடாட்சம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.

இதில் நாயகனாக கார்த்திக் சரண், நாயகியாக மகானா நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் பாக்யராஜ் வருகிறார். நிழல்கள் ரவி, கஞ்சா கருப்பு, பெஞ்சமின், `ராட்சசன்' யாசர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பட்டுக்கோட்டை சிவா இயக்கி உள்ளார். சியாமளா ரமேஷ் தயாரித்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ''முழுக்க இளைஞர்களை கவரும் வகையில் சண்டை காட்சிகள் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கொண்ட படமாக உருவாகிறது. இயற்கை வளங்களை ஒவ்வொருவரும் நமக்காகவும், எதிர்கால சந்ததியினருக்காகவும் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்காகவும் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் படத்தில் இருக்கும்'' என்றார்.

திருச்சி, துறையூர், திண்டுக்கல், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஒளிப்பதிவு: கே.எஸ்.பழனி, இசை: வாரன் சார்லி.