கோப்பு படம் 
மாவட்ட செய்திகள்

மும்பையில் சி.என்.ஜி., பி.என்.ஜி. கியாஸ் விலை உயர்வு

மும்பையில் சி.என்.ஜி. கிலோவுக்கு ரூ.7-ம், பி.என்.ஜி. யூனிட்டுக்கு ரூ.5-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மும்பை,

மும்பையில் சி.என்.ஜி. கிலோவுக்கு ரூ.7-ம், பி.என்.ஜி. யூனிட்டுக்கு ரூ.5-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குறைத்த மாநில அரசு

ரஷியா - உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பொது மக்களின் பாரத்தை குறைக்கும் வகையில் மாநில அரசு கடந்த 1-ந் தேதி மும்பை பெருநகரில் விற்பனை செய்யப்படும் சி.என்.ஜி. மற்றும் பி.என்.ஜி. கியாஸ் வாட் வரியை 13.5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக அதிரடியாக குறைத்தது.

இதன் காரணமாக சி.என்.ஜி. கிலோவுக்கு ரூ.6, பி.என்.ஜி. யூனிட்டுக்கு ரூ.3.50 குறைந்தது. இதனால் பொதுமக்கள் ஆறுதல் அடைந்தனர்.

உயர்த்திய மத்திய அரசு

எனினும் இந்த விலை குறைப்பால் பொதுமக்கள் பலன் அடையும் முன்பே, மீண்டும் சி.என்.ஜி., பி.என்.ஜி. விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சி.என்.ஜி. கிலோவுக்கு ரூ.7 அதிகரித்து ரூ.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல பி.என்.ஜி. யூனிட்டுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.41 விற்பனை ஆகிறது.

விலை உயர்வு குறித்து மகாநகர் கியாஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், "மத்திய அரசு உள்நாட்டில் உற்பத்தியாகும் இயற்கை எரிவாயுவின் விற்பனை விலையை 110 சதவீதம் அதிகரித்து உள்ளது" என்றார்.

இதற்கிடையே மாநில அரசு வரியை குறைத்த நிலையில், மத்திய அரசு விலையை உயர்த்தி மீண்டும் பி.என்.ஜி. சி.என்.ஜி. விலையை பழைய விலைக்கே கொண்டு வந்து விட்டதாக ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். மேலும் ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனவும் டிரைவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்

14-வது நாளாக உயர்வு

இதேபோல நேற்று பெட்ரோல், டீசல் விலை 14-வது நாளாக அதிகரித்தது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 84 காசு உயர்ந்து 120 ரூபாய் 51 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல டீசல் 85 காசு அதிகரித்து 104 ரூபாய் 77 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.