கொப்பரை தேங்காய் 
மாவட்ட செய்திகள்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து குறைந்தது

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து உள்ளது

பொள்ளாச்சி

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து உள்ளது.

வரத்து குறைவு

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார்.

இதற்கு பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 74 விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்திருந்தனர்.

கொப்பரை தேங்காயை தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. காங்கயம், வெள்ளக்கோவில் போன்ற பகுதிகளில் இருந்த வந்த 13 வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து இருந்தது. இதன் காரணமாக விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

தேங்காய் விலை உயர்வு

ஏலத்திற்கு முதல் தர கொப்பரை தேங்காய் 270 மூட்டை கொண்டு வரப்பட்டது. இந்த கொப்பரை தேங்காய் ரூ.118.50 முதல் ரூ.133.50 வரை ஏலம் போனது. இதேபோன்று 277 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் ரூ.84.50 முதல் ரூ.102.50 வரை ஏலம் போனது. மொத்தம் 497 மூட்டை கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதற்கிடையில் தேங்காய் விலை உயர்ந்து உள்ளது.

இதன் காரணமாக கொப்பரையாக மாற்றி தேங்காயை விற்பனை செய்ய பெரும்பாலனோர் முன் வரவில்லை. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட, இந்த வாரம் 290 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து உள்ளது. இதற்கிடையில் கடந்த வாரத்தை விட ரூ.2 கூடுதலாக கொப்பரை தேங்காய் ஏலம் போனது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.