வழக்கு விசாரணை
கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு மாவோயிஸ்டுகளான ரூபேஷ், அவரது மனைவி சைனா, கண்ணன், வீரமணி, அனுப் ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது தேசத்துக்கு எதிராக சதி செய்தல், போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டுகள் வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் அவர்கள் மீது கேரளாவிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதற்காக போலீசார் அவ்வப்போது கேரள கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணை கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது.
கோஷமிட்டபடி வந்தனர்
இதற்காக மாவோயிஸ்டுகள் ரூபேஷ், சைனா, கண்ணன், வீரமணி, அனுப் ஆகிய 5 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டபடி வந்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் 5 பேரும் நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கை அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அதன்பிறகு மாவோயிஸ்டுகள் 5 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.