ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
மின்சாரம் தாக்கியது
ஜோலார்பேட்டையை அடுத்த நாட்டறம்பள்ளி தாலுகா பெரியகோனாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் விவசாயி. இவரது மகன் வெற்றிவேல் (வயது 18). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஜோலார்பேட்டையை அடுத்த மேல் அச்சமங்கலம் பெரிய ஏரிக்கரை பகுதியில் உள்ளது.
விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் மாலை மாணவர் வெற்றிவேல் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டார் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனால் அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதைகேட்டதும் அங்கிருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது வெற்றிவேல் மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை பெருமாள் நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.