புதுச்சேரி
அரசு துறைகளில் காலியாக உள்ள 324 உதவியாளர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு இன்று நடந்தது. இதில் 64 சதவீதம் பேர் கலந்து கொண்டு எழுதினர்.
உதவியாளர் போட்டி தேர்வு
புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பதவிக்கு, துறை சார்ந்த போட்டி தேர்வு லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. இதற்காக மொத்தமுள்ள 324 இடங்களுக்கு பணியில் உள்ள முதுநிலை எழுத்தர்கள் 842 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
முதல் தாள் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், 2-ம் தாள் தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடந்தது. தேர்வர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஹால்டிக்கெட்டுடன் அடையாள அட்டை மட்டும் எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
64 சதவீதம் பேர் எழுதினர்
கைப்பை, செல்போன், புளூடூத், ஹெட்போன், கால்குலேட்டர், பென்டிரைவ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதில் மொத்தம் 539 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இது 64 சதவீதம் ஆகும். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.