மாவட்ட செய்திகள்

மின்கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மின்கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள். அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், சண்முகையா மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி,

கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்த நிலையில் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தி உள்ளர்கள் என்று அரசு பல மடங்கு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

அ.தி.மு.க. அரசின் போக்கை கண்டித்தும், மின்சார ரீடிங் எடுத்ததில் உள்ள குழப்பங்களை நீக்கவும், ஊரடங்கு கால மின் கட்டணத்தை குறைக்கக்கோரியும், குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக்கோரியும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கூறும் போது, தமிழக அரசு மின் கட்டணம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறது. 500 ரூபாய் மின்கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக செலுத்தும் நிலையை அரசு ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் இந்த மின்கட்டண வசூலை தி.மு.க. கண்டிக்கிறது. தமிழக அரசு மின்கட்டணத்தில் சலுகைகளை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில், அயிரவன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்தும், அ.தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று குலசேகரநல்லூர், ஒட்டநத்தம், எப்போதும்வென்றான், பசுவந்தனை உள்ளிட்ட இடங்களிலும்தமிழக அரசை கண்டித்து தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தண்டுபத்திலுள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.வீட்டின் முன் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தி.மு.க. மாநில மாணவரணிதுணை அமைப்பாளர் உமரிசங்கர், உடன்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளரும், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருமான டி.பி.பாலசிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆழ்வார்திருநகரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர செயலாளர் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி நகர தி.மு.க. செயலாளர் ஜாண்பாஸ்கர், உடன்குடி நகர 2-வது வார்டு செயலாளர் சலீம், உடன்குடி நகர பொருளாளர் தங்கம், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சிராசுதீன் ஆகியோர் வீட்டின் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எட்டயபுரம் நகர தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சூரியராஜ் தலைமை தாங்கினார்.

செய்துங்கநல்லூர் மின்சார அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் கலீலூன் ரகுமான் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் கைகளில் கருப்பு கொடி ஏந்தியபடி கோஷமிட்டனர்.

இதேபோல் கருங்குளம் ஒன்றியத்திற்கு உள்பட்ட 46 கிளைக் கழக பகுதிகளிலும் கருப்புக் கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாயர்புரத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகம் முன்பு ஒன்றிய தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார்.

திமுக சார்பில் கருப்பு கொடி ஏந்திய கண்டன ஆர்ப்பாட்டம் ஆறுமுகநேரி நகர திமுக சார்பில் பேயன்விளையில் நடந்தது. இதில் நகர தி.மு.க. செயலாளர் அ.கல்யாணசுந்தரம், நகர தி.மு.க. இளைஞரணி செயலாளர் அகஸ்டின் உள்ளிட்டோர் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் செய்து கண்டன குரல் எழுப்பினர்.

இதுபோல் காயல்பட்டணம் நகர தி.மு.க. சார்பில் காயல்பட்டணத்தில் சதுக்கைதெரு, தைக்கா தெரு, புதுபஸ்டாண்ட், கடற்கரை சாலை ஆகிய இடங்களில் நகர தி.மு.க. அவைத்தலைவர் முகமது மெய்தீன் தலைமையில் நகர செயலாளர் கே.ஏ.எஸ் முதக் முஹம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாசரேத்தில் தி.மு.க.வினர் தமிழக அரசின் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து கருப்பு சட்டை, கருப்புசின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர செயலாளர் ரவிசெல்வகுமார் தலைமை வகித்தார். நகர பொருளாளர் சுடலைமுத்து, துணை செயலாளர் ஜெயசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. சார்பில் சாத்தான்குளம் ஓடைக்கார தெருவில் ஒன்றிய செயலாளர் ஜோசப் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய பொருளாளர் வேல்துரை, நகர துணைச் செயலாளர் வெள்ள பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் புதிய வேத கோவில் தெரு முன்பு தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சரவணன் நகர இளைஞரணி அமைப்பாளர் முருகன் முன்னிலையிலும், சாத்தான்குளம் 1-வது வார்டில் மணிகண்டன் அம்புரோஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தட்டார் மடத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் பாலமுருகன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் பொதுமக்களுக்கு மின்கட்டண பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியில் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் கண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், தங்கச்சாமி உள்ளிட்ட பலர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் முழங்கினர்.

விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் தலைமையில் அவரது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கருப்புச்சட்டை அணிந்து தி.மு.க.வினர் மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின்பு விளாத்திகுளம் மதுரை ரோடு,பஜார் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.