குடிநீர் குழாய்கள் அகற்றம்
பவானிசாகரில் இருந்து சத்தி செல்லும் ரோட்டில் அய்யன்சாலை. இது உத்தண்டியூர் ஊராட்சிக்கு உள்பட்டது. அய்யன்சாலை பகுதியில் உள்ள 20 வீடுகளில் அனுமதியின்றி குடிநீர் குழாய் பதித்துள்ளதாக கூறி ஊராட்சி நிர்வாகம் நேற்று காலை குழாய்களை அப்புறப்படுத்தியது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் காலிக்குடங்களுடன் நேற்று மாலை 3 மணி அளவில் சத்தி-மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை...
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரி பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள், அனுமதியின்றி வீடுகளில் குடிநீர் குழாய் பதிப்பது சட்டப்படி குற்றம். ஊராட்சி அனுமதி பெற்றுதான் வீடுகளில் குடிநீர் குழாய் பதிக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். எனவே தற்போது சாலை மறியலை கைவிடுங்கள் என்றனர்.
அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.