ஸ்ரீரங்கம்,
திருச்சி திருவானைக்காவலை அடுத்த நடுக்கொண்டையம்பேட்டையில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கிருந்து மணல் ஏற்றி செல்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கும். அதில் தினமும் 200 லாரிகளுக்கு மணல் ஏற்றப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படும். இதற்காக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் லாரிகளுக்கு டோக்கன் கொடுப்பதில் திருவானைக்காவல் திம்மராயசமுத்திரம் அர்ஜூனர் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் பிரவீன் தரப்பிற்கும், நடுக்கொண்டையம்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் செல்வவிநாயகம் தரப்பிற்கும் கடந்த சில நாட்களாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் பிரவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பிரவீன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக பிரவீன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் கொண்டையம்பேட்டையை சேர்ந்த கமல், செல்வவ, லோகு, மந்திரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் கமல் மற்றும் செல்வவிநாயகத்தை கைது செய்தனர். இதேபோல் செல்வவிநாயகம் கொடுத்த புகாரின் பேரில் பிரவீன், அருண்குமார், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.