மாவட்ட செய்திகள்

புன்னக்காயலில் ரூ.45.50 கோடியில் தடுப்பணைகள் கட்டும் பணி; அதிகாரி ஆய்வு

புன்னக்காயலில் ரூ.45.50 கோடியில் தடுப்பணைகள் கட்டும் பணியை, மாவட்ட வளர்ச்சி திட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.

ஆறுமுகநேரி:

நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு நீண்ட தூரம் ஓடி இறுதியாக தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. அப்பகுதி மீனவர்கள், மற்றும் விவசாயிகளின், நலன் கருதி புன்னக்காயல் மற்றும் சேர்ந்தபூமங்கலம், முக்காணி பகுதியில் ரூ.45.50 கோடி மதிப்பீட்டில், மூன்று தடுப்பணைகள் கட்டி அதன் மூலம் நல்ல நீரை சேமித்து வைக்கவும், கடல் நீர் உட்புகாமல் தடுக்கவும், மழை நேரத்தில் வீணாக கடலில் கலக்கும் மழை நீரை பாதுகாக்கவும், மூன்று தடுப்பணைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

இப்பணிகளை தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான ஜி.பிரகாஷ் ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார தலைமை பொறியாளர் கிருஷ்ணன், பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் ஞானசேகரன், செயற் பொறியாளர்கள் அண்ணாதுரை, பத்மா, ஏரல் தாசில்தார் இசக்கி ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.