மாவட்ட செய்திகள்

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி:

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தேனி பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசின் கடன் தள்ளுபடி திட்ட பயனாளிகள் பட்டியலை விரைந்து நிறைவு செய்ய வேண்டும், பொங்கல் தொகுப்பை பேக்கிங் செய்த தொகுப்பாக வழங்க வேண்டும், அரசு உத்தரவுப்படி கருணைத்தொகை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிவரன் மற்றும் பதவி உயர்வை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் காமராஜ்பாண்டியன் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்த மாதம் ஜனவரி 5-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.