பரமக்குடி,
பரமக்குடியில் சிறை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள செங்கற்படை பகுதியைச் சேர்ந்த 29 வயது கைதி பரமக்குடியில் உள்ள கிளை சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு கடந்த சில தினங்களாக கடும் காய்ச்சல் இருந்துள்ளது. உடனே அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிறைச்சாலை போலீசார் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.
அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஒமைக்காரன் தொற்று பரிசோதனையும் அவருக்கு நடத்தப்பட உள்ளது.
பரிசோதனை
மேலும் அந்த சிறைச்சாலையில் உள்ள மற்ற கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சிறைத்துறை காவலர்கள் தெரிவித்தனர்.