மாவட்ட செய்திகள்

கொரோனா கட்டுப்பாடு திருத்தணி முருகன் கோவிலில் 31-ந்தேதி நள்ளிரவு புத்தாண்டு தரிசனம் ரத்து

கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் 31-ந்தேதி நள்ளிரவு புத்தாண்டு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டின் கடைசி நாள் திருப்புகழ் மற்றும் திருப்படி திருவிழா நடைபெறும். தற்போது ஒமைக்ரான் நோய்தொற்று பரவி வரும் சூழ்நிலையில் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. சத்யா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, தாசில்தார் ஜெயராணி மற்றும் பலதுறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, குடிநீர், மருத்துவ வசதி, தற்காலிக கழிவறை வசதி, போன்றவை குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய் ஆர்.டி.ஓ. அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் கோவில் வளாக பகுதியில் வரும் பக்தர்களுக்கு கிருமிநாசினி, முககவசம் வழங்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் ஆர்.டி.ஓ. அறிவுறுத்தினார், வருகிற 31-ந்தேதி அதிகாலை திருப்புகழ் ,திருப்படி திருவிழா நிகழ்ச்சி மலைக்கோவில் அடிவாரத்தில் சரவண பொய்கை குளம் அருகே தொடங்குகிறது.

மேலும் அன்று காலை 11 மணிக்கு மலைக்கோவில் வளாகத்தில் தங்க தேர் பவனியில் முருகப்பெருமான் வலம் வருகிறார். வருகிற 31-ந்தேதி இரவு 10-மணிக்கு கோவில் மூடப்படுகிறது, அன்று இரவு தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் ஜனவரி மாதம் 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் திறக்கப்படும், அன்றுபகல் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம், முககவசம், சமூக இடைவெளி, பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் முருகன் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.