மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் மேலும் 2 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

தூத்துக்குடியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 24 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். மீதமுள்ளவர்களில் 18 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், 5 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். அவர்களது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதில் நேற்று சிலரின் பரிசோதனை முடிவுகள் வந்தன.

அதில் தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்கள் கொரோனா தாக்கி இறந்த மூதாட்டியுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து உள்ளது.