சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 18 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ் தெரிவித்தார்.
700 இடங்களில்
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க நேற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சுகாதாரத்துறை துனை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ் மாவட்டத்தில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 700 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 86 முகாம்கள் நகராட்சி பகுதிகளிலும் 614 முகாம்கள் ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.
18 லட்சம் பேருக்கு
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் 3-ந்தேதி வரை மொத்தம் 18 லட்சத்து 21 ஆயிரத்து 83 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 10 லட்சத்து 33 ஆயிரத்து 240 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 52 ஆயிரத்து 345 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி 6 ஆயிரத்து 939 பேருக்கு போடப்பட்டு உள்ளது. தற்போது கோவிஷீல்டு 78 ஆயிரம் டோஸ்களும், கோவாக்சின் தடுப்பூசி 45 ஆயிரத்து 500 டோஸ்களும் கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை
சிவகங்கை நகரில் நடைபெற்ற முகாமை நகராட்சி தலைவர் துரை ஆனந்த், ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மேலாளர் ராஜேஸ்வரன் நகர்நலமைய டாக்டர் கலா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.