மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 40,945 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 40,945 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 16-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள் என மொத்தம் 485 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டன. டாக்டர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்தில் 15 கட்டமாக நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 6 லட்சத்து 11 ஆயிரத்து 779 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாம்களில் 40 ஆயிரத்து 945 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை கொரோனா தடுப்பூசியை செலுத்த ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது. அங்கு அவர்களின் விவரங்களை செவிலியர்கள் பதிவு செய்தனர். பின்னர் சமூக இடைவெளியுடன் ஒவ்வொருவராக தடுப்பூசி செலுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.