மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது.

மதுரை,

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும் விதமாக அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாமை அரசு நடத்தி வருகிறது.

நேற்று 50 ஆயிரம் இடங்களில் 12-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. மதுரையிலும் 1,500 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடந்தது. அந்த முகாம்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்துவோர் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தினர்.

நேற்று மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் 941 பேரும், அரசு மருத்துவமனையில் 505 பேரும், புறநகரில் 41 ஆயிரத்து 168 பேரும், நகர் பகுதியில் 36 ஆயிரத்து 569 பேரும் என மொத்தம் ஒரே நாளில் 79 ஆயிரத்து 183 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் மூலம் மதுரையில் தடுப்பூசி செலுத்தியவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

தென் மாவட்டங்களை ஒப்பிடும் போது மதுரையில் அதிக மக்கள் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 25 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.