மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 முதியவர்கள் பலி; புதிதாக 198 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 முதியவர்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 198 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 முதியவர்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 198 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

198 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. எனினும் தமிழக அளவில் பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2 -வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 198 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 91 ஆயிரத்து 157 ஆக உயர்ந்தது.

3 முதியவர்கள் பலி

இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 66 வயது முதியவர் கொரோனா தொற்று காரணமாக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த 8-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல் கொரோனாவுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த 68 வயது முதியவர் மற்றும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் ஆகியோர் கடந்த 9-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்தது.

மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 174 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 87 ஆயிரத்து 695 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். தற்போது தொற்று உள்ள 2 ஆயிரத்து 847 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.