மாவட்ட செய்திகள்

மழையால் பயிர்கள் பாதிப்பு: ரூ.14 கோடி நிவாரண உதவிகள்

திருவள்ளூரில் 2021-2022-ம் ஆண்டு சம்பா பருவத்துக்கு அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம் மற்றும் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆவடி நாசர் கலந்துக்கொண்டு சம்பா பருவத்திற்கு அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

அதை தொடர்ந்து கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் பயிர்கள் 33 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 13 ஆயிரத்து 405 பேருக்கு ரூ.14 கோடியே 17 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் எபினேசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சேகர், அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.