லால்குடி,
லால்குடியை அடுத்த நெடுஞ்சலங்குடியை சேர்ந்தவர் சரவணக்குமார்(வயது 36). இவர் நேற்று அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்க்க சென்றார். பின்னர் நேற்று மாலை அவர் அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மாந்துறை பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த ஒரு கார் அவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அவர்களிடம் சரவணக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் அவரை கட்டையால் தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்றனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சரவணக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் ஒரு ஜவுளிக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.