திண்டுக்கல்:
குடிநீர் வசதி வேண்டும்
திண்டுக்கல் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் மட்டுமே குடிநீர் வசதி உள்ளது. மதுரை, காரைக்குடி, பழனி, கரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடைகள், கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிற்கும் இடங்களில் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியை முழுமையாக செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
3 ஆண்டுகளாக குடிநீர் தண்ணீர் கிடைக்கவில்லை
சாணார்பட்டி போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள தெருவில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பக்கத்து ஊர்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை உள்ளது. எனவே பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சக்திவேல், சாணார்பட்டி.
ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுமா?
பெரியகோட்டை ஊராட்சியை சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏ.டி.எம். மையம் வசதி செய்யப்படவில்லை. இதனால் அவசர தேவைக்கு பணம எடுக்க வேண்டும் என்றால் கூட இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரியகோட்டைக்கு வரவேண்டி உள்ளது. எனவே கிராமப்பகுதியில் ஏ.டி.எம். மையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-லிங்கம், கஸ்தூரிநாயக்கன்பட்டி.
பள்ளத்தால் ஏற்படும் விபத்து
பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் தேக்கந்தோட்டம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. அப்போது தரைமட்டத்தைவிட சாலை சற்று உயரமாக அமைக்கப்பட்டு விட்டது. இதனால் சாலையின் இருபுறமும் பள்ளம் போல் ஏற்பட்டுவிட்டது. இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பதை கவனிக்காமல் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையின் இருபுறமும் ஏற்பட்ட பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரிமுத்து, பழனி.