தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதம் அடைந்த பாலம்
தேனி கொட்டக்குடி ஆற்று பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதற்கிடையே அந்த பாலம் சேதம் அடைந்து விட்டது. இதனால் விபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்துடன் வாகனங்களில் செல்லும் நிலை உள்ளது. எனவே சேதம் அடைந்த பாலத்தை சரிசெய்ய வேண்டும்.
-ரவிசங்கர், தேனி.
கூம்பு வடிவ ஒலிபெருக்கி
பழனி பகுதியில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். எனவே கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
-கண்ணன், பழனி.
பாலத்தில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
குஜிலியம்பாறை ஒன்றியம் கருங்கல் ஊராட்சி தீண்டாக்கல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் இரவில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க பாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.
-ஆறுமுகம், கருங்கல்.
பள்ளியில் மரம் வளர்க்க வேண்டும்
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் அரசு பள்ளி வளாகத்தில் நின்ற மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. எனவே சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மீண்டும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.
-மக்கள்செல்வம், தேனி.