மாவட்ட செய்திகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டி 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி' புகார் பெட்டி 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகளை அகற்ற வேண்டும்
தேனி மாவட்டம் சருத்துப்பட்டி இந்திரா காலனியில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே தொற்றுநோய் பரவும் முன்பு குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் தினமும் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், சருத்துப்பட்டி.
அபாய மின்கம்பிகள்
வத்தலக்குண்டுவில் இருந்து தாண்டிக்குடி செல்லும் சாலையில் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இந்த வழியாக பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின் கம்பிகளை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல்லில் இருந்து ஏ.வெள்ளோட்டுக்கு வேடபட்டி ஒத்தக்கண் பாலத்தின் வழியாக மக்கள் அதிக அளவில் வாகனங்களில் செல்கின்றனர். இந்த பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே நெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவசக்தி, ஏ.வெள்ளோடு
தூர்வாராத சாக்கடை கால்வாய்
பழனி அருகே அ.கலையம்புத்தூர் ஊராட்சி ராஜபுரம் ரைஸ்மில் காலனியில் உள்ள சாக்கடை கால்வாயில் மண் மற்றும் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-விக்னேஷ், ராஜாபுரம்.