சேதமடைந்த பாலம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் கிராமத்தில் உள்ள பாலம் மிகவும் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதன் வழியாக அனைத்து கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் வாகன ஓட்டிகள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும். மேலும் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், திருவாஞ்சியம்.
மின்விளக்குகள் எரியுமா?
திருவாரூர் மாவட்டம் புலிவலம் வாளவாய்க்கால் அருகே ரவுண்டானா உள்ளது. இந்த ரவுண்டானாவில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த உயர் கோபுரத்தில் உள்ள மின்விளக்குள் எரிவது இல்லை. இதனால் அந்த பகுதியே இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் இருள் சூழ்ந்து இருப்பதால் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுரத்தில் உள்ள மின்விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சாமி, திருவாரூர்.