மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே வீராசாமி நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகள் மத்தியில் மதுக்கடை அமைந்துள்ளது. இந்த மதுக்கடையால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.

மதுக்கடையை மூட வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர். பொதுமக்கள் போராட்டம் நடத்தும்போது அங்கு வந்து சமரசம் பேசும் அதிகாரிகள் மதுக்கடையை அகற்றுவதாக உறுதி அளித்து சென்ற பிறகும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் நேற்று மேற்கண்ட மதுக்கடை திறப்பதற்கு முன்பே அங்கு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 150 பேர் கூடினர். அவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள், தொடர்ந்து 2 ஆண்டுகளாக போராடி வரும் பொதுமக்களை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி தாசில்தார் ஸ்ரீதரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 2 மாதத்தில் உறுதியாக மதுக்கடை அகற்றப்படும் என்று தாசில்தார் ஸ்ரீதரன் உறுதி அளித்தார். இதையடுத்து தங்களது முற்றுகை போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.