மாவட்ட செய்திகள்

சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 14 வீடுகள் இடித்து அகற்றம்-வேப்பனப்பள்ளி அருகே பரபரப்பு

வேப்பனப்பள்ளி அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 14 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 14 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு வீடுகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வி.மாதேப்பள்ளி கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவர் நேரடியாக விசாரணை நடத்தியதில் 14 வீடுகள் மாதேப்பள்ளி கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 14 வீடுகளையும் இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி 14 வீடுகளில் வசிப்போருக்குநோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இடித்து அகற்றம்

இதைத்தொடர்ந்து தாசில்தார் சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் நேரில் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி காலக்கெடு விதித்தனர். இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் நேற்று வரை ஆக்கிரமிப்புகளை யாரும் அகற்றவில்லை. இந்த நிலையில் நேற்று தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் செந்தில்நாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்ன கிருஷ்ணன், ஹேமலதா மற்றும் போலீசார் முன்னிலையில் 14 குடியிருப்பு வீடுகளின் சுவர்கள் மற்றும் சாலை ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதையடுத்து குடியிருப்புவாசிகள் அவரவர் உடைமைகளை வீடுகளில் இருந்து அகற்றி கொண்டனர்.

மேலும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து யாரும் வீடுகள் கட்டக்கூடாது என்று வருவாய்த்துறையினர் அந்த பகுதி பொதுமக்களுக்கு அறுவுறுத்தினர். நேற்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையொ ட்டி, அந்த பகுதியில் நாள்முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 14 வீடுகள் இடித்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சம்பவம் வேப்பனப்பள்ளி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.