திருவாரூர்:
இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து திருவாரூரில் மீனவர் தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் படுகொலை சம்பவங்களை கண்டித்தும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மாசோதாவை கைவிட வேண்டும். உற்பத்தி விலையில் மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும். மீனவ பெண்கள் குடிசை தொழில் ஏற்படுத்த வங்கி கடன் வழங்க வேண்டும். கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களுக்கான காப்பீடு திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம்
அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் செல்வம், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் சேக்அப்துல்லா, தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி கலைச்செல்வன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.