பேசும் பெருமாள் கோவில் 
ஆலய வரலாறு

பக்தர்களுடன் நெருக்கமாக உரையாடும் பெருமாள்

பக்தர்கள், தங்கள் மனக்குறைகளை பேசும் பெருமாளிடம் சொல்லி வேண்டினால் உள்ளத்தில் அமைதி ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் கூழமந்தல் எனும் ஊரில் அமைந்துள்ளது 'பேசும் பெருமாள்' கோவில். மிகவும் பழமைவாய்ந்ததாக கருதப்படும் இக்கோவிலில் சப்தரிஷிகள் தவம் இயற்றி உள்ளனர். அப்போது அவர்களின் மனதில் எழுந்த சந்தேகங்களுக்கும். வேண்டுதல்களுக்கும் பெருமாள் நேரடியாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள பெருமாள், கிருஷ்ணர் போலவே பக்தர்களுடன் நெருக்கமாக இருந்து உரையாடுவதாகவும் நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே இங்குள்ள பெருமாள். 'பேசும் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.

இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இவ்வூர் 'கூழம் பந்தல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கூழன் என்பது ஒரு வகை பலா மரத்தின் பெயர் ஆகும். இப்பகுதியில் அவ்வகை பலா மரங்கள் நிறைந்திருந்ததாகவும், அவ்வழியே சாலை சென்றதால் 'கூழம் பந்தல்' எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்கிறார்கள்.

இக்கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. ராஜகோபுரத்தின் முன்பாக கல்வெட்டுகளுடன் இரண்டு கல் தூண்கள் உள்ளன. ராஜகோபுரத்தை கடந்ததும், பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் அமைந்துள்ளன. கருவறையில் பேசும் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி தாயாருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் வரஹஸ்த, கடிஹஸ்த முத்திரை காட்டியும் காட்சி தருகிறார். இவரது முகபாவனை, நம்மிடம் பேசுவது போன்று உள்ளது.

இத்தலம் வரும் பக்தர்கள், தங்கள் மனக்குறைகளை பெருமாளிடம் சொல்லி வேண்டினால் உள்ளத்தில் அமைதி ஏற்படுவதாக கூறுகிறார்கள். இத்தல பெருமாளை வேண்டி விரதம் இருந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் செய்யும் விரதங்கள், தானம், வேள்வி எதுவாக இருந்தாலும் அதன் பலன் ஆயிரம் மடங்காக கிடைக்கும் என்கிறார்கள், இங்கு வரும் பக்தர்கள், தேங்காயில் நெய் தீபம் ஏற்றி ஒன்பது முறை வலம் வந்தும், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, வெண்ணெய் சாற்றி, பால், பழங்கள், வெற்றிலை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

Also read:சர்ப்ப தோஷம் போக்கும் மலைமண்டல பெருமாள் கோவில்