சென்னை செங்குன்றம் அருகில் உள்ளது "ஞாயிறு" புஷ்பரதேஸ்வரர் கோவில். இக்கோவில் பல அரிய பொக்கிஷங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இவ்வூரின் பெயரே 'ஞாயிறு' (சூரியன்). ஒருமுறை பிரம்மதேவர் யாகம் செய்தபோது, அதில் ஏற்பட்ட தவறால் சூரியனின் ஒளி மங்கியது. தன் ஒளியை மீண்டும் பெற சூரியன் இத்தலத்து ஈசனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
ஞாயிறு திருத்தலத்தில் ஞாயிற்றுகிழமை வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரை வரும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் வழிபாடு செய்வது மிக சிறப்பான நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் வழிபாடு செய்தால் ஜென்ம பாவம் நீங்கி மோட்சம் கிடைப்பது என்பது ஐதீகம்.
சிலருக்கு பக்கத்து வீட்டுக்காரர்களால் அடிக்கடி தொல்லை இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு தொழில் ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக கண் தெரியாத எதிரிகள் இருப்பார்கள். அத்தகைய எதிரிகளால் ஏற்படும் துன்பத்தை விரட்டும் சக்தி இந்த ஆலயத்துக்கு உண்டு.
ஞாயிற்றுக்கிழமை இந்த ஆலயத்தின் வளாகத்தில் ஏதாவது பகுதியில் அமர்ந்து ஆதித்ய இருதயம் (ஆதித்ய ஹ்ருதயம்) ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.