சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. வரும் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதிக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
குண்டம் விழாவிற்கான பூச்சாட்டுதலைத் அம்மன் சப்பர ஊர்வலம் நடைபெறுகிறது. பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் ஆகிய உற்சவ அம்மன்கள், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி கிராமங்கள் தோறும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஊர்வலம் 17-ம் தேதி இரவு 12 மணிக்கு சிக்கரசம்பாளையம் மாரியம்மன் கோவிலை அடைந்ததும் சப்பரம் இறக்கி வைக்கப்பட்டது.
நேற்று (18.3.2026) காலை 7 மணிக்கு அம்மன் சப்பர ஊர்வலம் மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு சிக்கரசம்பாளையம் கிராமம் முழுவதும் நடைபெற்றது. அதன் பிறகு இக்கரை நெகமம் புதூர் வந்து அங்குள்ள அம்மன் கோவிலில் சப்பரம் இறக்கி வைக்கப்பட்டது.
இன்று (19.3.2026) காலையில் இக்கரை நெகமம் புதூரில் வீதி உலா முடித்துவிட்டு, அந்தப் பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலை சப்பரம் வந்தடைந்தது. அப்போது அங்குள்ள பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க அம்மனை வரவேற்றார்கள். அதன் பிறகு பெண்கள், தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு மற்றும் பழங்கள் வைத்து கற்பூரம் ஏற்றி அம்மனை வணங்கினார்கள்.
பூஜைகள் முடிந்தபின் சப்பரம் புறப்பட தயாரானபோது, அந்த பகுதியில் உள்ள ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சப்பரம் முன்பு தரையில் படுத்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். சப்பரத்தை சுமந்து வந்த பக்தர்கள், பூசாரி ஆகியோர் தரையில் படுத்திருந்த பக்தர்களை தாண்டி சென்றார்கள். சப்பரம் கடந்து சென்றதும், அந்த பகுதியில் உள்ளவர்கள் தேங்காய்களை தரையில் அடித்து உடைத்து வழிபட்டனர். இக்கரை நெகமம்புதூரில் அம்மன் வீதி உலா முடித்து வெள்ளியம்பாளையம் வந்தது.