திருப்பதி,
திருப்பதி கோதண்டராம சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் மாலையில் வாகன சேவைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலையில் சின்ன சேஷ வாகன சேவையும், இரவில் ஹம்ச வாகன சேவையும் நடைபெற்றது.
இந்நிலையில் விழாவின் மூன்றாம் நாளான இன்று காலை 8 மணிக்கு சிம்ம வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் கோதண்டராம சுவாமி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன சேவையின்போது கோலாட்டம், பரத நாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிலர் கடவுள்கள் போன்று வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர்.
வாகன சேவையைத் தொடர்ந்து காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை 'ஸ்நாபன திருமஞ்சனம்' நடைபெற்றது. சீதா மற்றும் லட்சுமணருடன் எழுந்தருளியுள்ள கோதண்டராமரின் உற்சவத் திருமேனிகளுக்கு, பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றைக் கொண்டு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்பட்டது.
மாலை 7:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, முத்துப்பந்தல் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
இன்றைய வாகன சேவை நிகழ்வில் கோவில் துணை நிர்வாக அதிகாரி நாகரத்னா, கோவில் ஆய்வாளர்கள் சுரேஷ் பாபு, ஹரி கிருஷ்ணா மற்றும் அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.