இந்திர விழா கொடியேற்றம் 
ஆன்மிகம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர விழா தொடங்கியது

இந்திர விழாவிற்கான கொடியேற்றத்தைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாபிகை சமேத சுவேதாரணேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் தனது 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்துடன் கூடிய அகோர மூர்த்தியாக காட்சியளிக்கிறார். மேலும் நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. உலகிலேயே மூன்று குளங்களைக் கொண்ட ஒரே கோவிலாக விளங்குகிறது.

பல்வேறு ஆன்மிக சிறப்புகளை கொண்ட இக்கோவிலின் இந்திர திருவிழா சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி கோயிலின் கொடிமரம், விநாயகர் மற்றும் நந்தி ஆகியவற்றுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்கிட அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் நந்தி உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்து உற்சவத்தை தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடந்தது. இதில் அறங்காவலர் குழு தலைவர் ரவி, நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.