திருப்பதி:
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வரும் 19-ம் தேதி உகாதி ஆஸ்தானம் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு கோவில் மரபுகளின்படி இன்று காலையில் 'கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்' எனப்படும் தூய்மைப்பணி நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, அதிகாலையில் சுப்ரபாதம் இசைத்து பகவானை துயிலெழுப்பி, அதனைத் தொடர்ந்து தோமால சேவை மற்றும் சஹஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை நடைபெற்றன. பின்னர், காலை 7 மணி முதல் 9 மணி வரை, ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ புண்டரிகவல்லி தாயார் சன்னதிகள் உள்பட கோவில் வளாகம் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது.
பின்னர் நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம் மற்றும் பிற புனிதப் பொருட்கள் ஆகிய நறுமண கலவை கலந்த புனித நீர், கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
இப்பணிகள் நிறைவடைந்த பின், காலை 9.30 மணி முதல் பக்தர்கள் சர்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், கோவில் துணை நிர்வாக அதிகாரி சாந்தி, உதவி நிர்வாக அதிகாரி நாராயண சௌத்ரி, கண்காணிப்பாளர் சிரஞ்சீவி மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.