சித்திரை திருவிழா (கோப்பு படம்) 
ஆன்மிகம்

மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 19-ந்தேதி தொடங்குகிறது

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 1-ந்தேதி நடக்கிறது.

மதுரை,

மதுரையில் நடக்கும் விழாக்களில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறும். வெளியூர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அழகரை தரிசனம் செய்வார்கள்.

அவ்வகையில், இந்த ஆண்டு சித்திரை திருவிழா அடுத்த (ஏப்ரல்) மாதம் 19-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மீனாட்சி-சுந்தரேஸ்வரர் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 26-ந்தேதி இரவு 7.05 மணி முதல் 7.29 மணிக்குள் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. மறுநாள் திக்விஜயம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 28-ந்தேதி காலையில் நடக்கிறது. 29-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும்.

ஏப்ரல் 30-ந் தேதி கள்ளழகர் எதிர்சேவையும், மே 1-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடக்கிறது.