ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழா இன்று தொடங்கியது-
இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, சுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி விழா 12 நாட்கள் நடைபெறும். தினமும் சுவாமி-அம்பாள் வாகன வீதியுலா நடைபெறுகிறது. மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 15ம் தேதி அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் சுவாமி, அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
அடுத்த நாள் அதாவது, பிப்ரவரி 16ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட மரத் தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர்.
17ம் தேதி மாசி அமாவாசையன்று கோவில் அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி-அம்பாள் எழுந்தருளியதும், தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
திருவிழாவின் கடைசி நாளான 19ஆம் தேதி அன்று சண்டிகேஸ்வரர் எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.
மகா சிவராத்திரி திருவிழா தொடங்கியுள்ளதை தொடர்ந்து தினமும் இரவு 7 மணிக்கு மேல் ராமேஸ்வரம் தெற்கு கோபுரம் அருகே உள்ள திருக்கல்யாணம் மண்டபத்தில் வைத்து ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி, பரதநாட்டியம், பக்தி இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.